Jesus Power
Ministries

LUXORA GROUP

Ideas. Innovation. Impact.

Talk to Our Team

+91 98765 43210 hello@example.com

Mon–Sat: 9:00 AM–6:00 PM

Get Started
Faith • Truth • Hope

Faith Digest

Discover inspiring Bible messages, practical Christian teachings, devotional thoughts and faith-building reflections for everyday life.

சமாதானமும் சந்தோஷமும்

சமாதானமும் சந்தோஷமும்

«“இலக்கை நோக்கித் தொடருகிறேன்.” — பிலிப்பியர் 3:14»

இன்றைய வேதப்பகுதி: பிலிப்பியர் 3:1–15

சமாதானம் என்பது நம்முடைய ஆசையாக இருக்க வேண்டும். சந்தோஷம் என்பது நம்முடைய எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும். ஆனால், அவைகளே நம்முடைய வாழ்க்கையின் இலக்குகளாக இருக்கக் கூடாது. அவற்றையே இலக்குகளாகக் கொண்டு வாழும்போது, நாளடைவில் சமாதானக் குறைவும் சந்தோஷக் குறைவும் ஏற்படலாம்.

சமாதானமும் சந்தோஷமும், நாம் ஒரு உயர்ந்த இலக்கை நோக்கிப் பயணிக்கும்போது ஏற்படும் பிரதிபலன்களாகும். எனவே, ஒரு பரிசுத்தமான வாழ்வே நம்முடைய வாழ்க்கையின் இலக்காக இருக்க வேண்டும். பரிசுத்தமான வாழ்க்கை என்ற இலக்கை நோக்கி நாம் நடக்கும்போது கிடைப்பதுதான் உண்மையான சமாதானமும் சந்தோஷமும்.

பரிசுத்தமான வாழ்க்கை என்றால் என்ன?

பரிசுத்தமான வாழ்க்கை என்பது துறவற வாழ்க்கை அல்ல. அது காவி நிற ஆடைகளை அணிந்து வாழ்வதோ, கடுந்தவம் புரிவதோ அல்ல. தேவன் நமக்கு அனுமதிக்கும் வாழ்க்கைச் சூழ்நிலைகளில், எவ்வாறு வாழ்ந்தால் அது தேவனுக்குப் பிரியமாக இருக்குமோ, அவ்வாறு வாழ்வதே பரிசுத்தமான வாழ்க்கை.

யோசேப்பின் வாழ்க்கையை இதற்கு ஓர் அழகான உதாரணமாகக் காணலாம். தன் தந்தையின் செல்லப்பிள்ளையாக வாழ்ந்த காலம் அவனுக்கு இருந்தது. பின்னர், எகிப்தில் அரண்மனை அதிகாரியின் வீட்டில் வசதியான சூழ்நிலையில் வாழ்ந்த காலமும் இருந்தது. அதன்பிறகு, சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுக் கிடந்த காலமும் வந்தது.

அவனுடைய வாழ்க்கைச் சூழ்நிலைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தன. ஆனால், அவனுடைய வாழ்க்கையின் இலக்கு மாறவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் தேவனுக்குப் பிரியமானவனாக வாழ வேண்டும் என்பதே அவனுடைய இலக்காக இருந்தது. அதனால்தான், சூழ்நிலைகள் மாறினாலும், தேவனோடு இருந்த உறவில் அவன் நிலைத்திருந்தான்.

தேவனை நமக்கு நெருக்கமானவராக அறிந்து வாழ ஜெபம், ஆராதனை, வேத தியானம் போன்ற பல காரியங்கள் நமக்கு உதவுகின்றன. ஆனால், இவை அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது தேவனைப் பிரியப்படுத்தி வாழ வேண்டும் என்ற பரிசுத்தமான இலக்கு ஆகும்.

தேவனைப் பிரியப்படுத்தி வாழ வேண்டும் என்ற இலக்கு கொண்ட இருதயத்தில், தேவனோடு நெருங்கிய உறவு உருவாகிறது. ஏனென்றால், தேவனோடு உறவு இல்லாமல், தேவனுக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ்வது சாத்தியமல்ல.

தேவ ஐக்கியத்தின் பின்பலத்தைக் கொண்டுதான் பரிசுத்தமான வாழ்க்கை என்ற இலக்கை எட்ட முடியும். தேவ உறவு எங்கே இருக்கிறதோ, அங்கே தெய்வீக சமாதானமும் உண்மையான சந்தோஷமும் இல்லாமல் இருக்காது.

தேவனுக்காக வாழ்வதைத் தன் வாழ்க்கையின் இலக்காகக் கொண்டிருந்த தாவீதும், பல போராட்டங்களின் நடுவிலும் ஆனந்தமாக வாழ்ந்தான். அவனுடைய சந்தோஷம் சூழ்நிலைகளில் இருந்து வரவில்லை; தேவனோடு கொண்டிருந்த உறவிலிருந்து வந்தது.

அதுபோலவே, நாமும் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் மட்டுமே தேடி ஓடாமல், தேவனுக்குப் பிரியமான பரிசுத்த வாழ்க்கையை இலக்காகக் கொண்டு ஓடுவோம்.

சூழ்நிலைகள் மாறலாம். மனிதர்கள் மாறலாம். வாழ்க்கையின் பாதைகள் மாறலாம். ஆனால், நம்முடைய இலக்கு மாறாமல் இருக்கட்டும்.

 

ஜெபம்:

அன்பின் பரலோகப் பிதாவே,

என் வாழ்க்கையின் இலக்கு, உமக்குப் பிரியமான பரிசுத்த வாழ்க்கையை வாழ்வதே என்பதை உணர்த்தியதற்காக உமக்கு நன்றி.

அப்போஸ்தலனாகிய பவுலைப் போல, இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடவும், யோசேப்பு மற்றும் தாவீதைப் போல எல்லாச் சூழ்நிலைகளிலும் உமக்குப் பிரியமாக வாழவும் எனக்கு கிருபை தாரும்.

உம்மோடுள்ள ஐக்கியத்தில் என்னை நிலைநிறுத்தும். என் இருதயத்தை உமது சமாதானத்தாலும் உண்மையான சந்தோஷத்தாலும் நிரப்பும்.

என் வாழ்வின் எல்லா நாட்களிலும் உமது சித்தத்தின்படி நடக்கவும், உமக்குப் பிரியமான வாழ்க்கையை வாழவும் எனக்கு உதவி செய்யும்.

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்.

ஆமென்.