இன்றே செயல்படு..
இன்றைய வேத பகுதி: அப்போஸ்தலர்.22:1-21
நாளைக்குச் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உண்டு. அவைகளை முந்திக்கொண்டு இன்றே செய்ய விரும்புதல் நல்லதல்ல. அதே வேளையில், பல விஷயங்கள் இன்றே செய்ய வேண்டியவை. இவைகளை நாளைக்கு எனத் தள்ளிப் போடுவது நலமாகயிராது. சில நேரங்களில் இன்று சில சிரமங்களுக்குள் செல்ல மனம் விரும்பாமல், அவைகளை நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்து, இன்றைய தினத்தை விடுதலையாக்கிக் கொள்வது இயற்கையான இயல்பு. ஆனால், நாளைக்குச் செய்யலாம் எனப் பல வேலைகளைத் தள்ளிப் போடுவதை விட, இன்றே அதனை ஏன் செய்யக் கூடாது என்று நமக்குள் கேட்டுச் செயல்படுவது மிகச் சிறந்த பழக்கம்.
வாழ்க்கையிலே சில முக்கிய விஷயங்கள் காலதாமதமாகிச் செய்யப்படுவதும், சில விஷயங்கள் செய்ய முடியாதபடி காலங்கடந்து விடுவதும் நாளை செய்யலாம் என்ற மனநிலையின் விளைவாகும். வாழ்க்கையில் முன்னுக்கு வந்து உயர் நிலையை அடைகின்ற அநேகரிடம் காணப்படும் முக்கியமான ஒரு பண்பு, அவர்கள் எதையும் நாளைக்கு எனத் தள்ளிப்போடாமல், இன்றே செய்து விடுவோம் எனத் துணிந்து விட்டமையே. இன்று செய்யத் தாமதிக்கும் சில விஷயங்கள் நாளைக்குச் செய்ய இயலாமல் போகும்படி ஏதாவது நடந்துவிடக்கூடும்.
கோலியாத்தின் சவாலை ஏற்க முடியாதபடி சவுல் ராஜாவும், சேனைகளும் பரிதவித்த வேளையில், தாவீது அவனை வீழ்த்த விரும்பினான். அதைக் குறித்துச் சில நாட்கள் யோசிப்போம் என அவன் காலதாமதமாக்கவில்லை. அவன் உடனேயே தன்னை ஆயத்தம் செய்து அவனை வீழ்த்த விரைந்தான். தேவன் அவனுக்குத் துணை நின்றார். இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் பரிமளத்தைலத்தை ஊற்றின பெண்மணி, நேரத்தைச் சரியாக உபயோகித்துக் கொண்டாள்.இப்போது என்ன அவசரம்? எனப் பொறுமையாக இருந்திருந்தால் ஒரு நல்ல பங்கைத் தவறவிட்டிருப்பாள்.
எந்த ஒரு நற்செயலையும், நற்பழக்கத்தையும், நற்குணத்தையும், நல்முயற்சியையும், இன்றே செயல்படுத்தும் மனநிலையையும், பழக்கத்தையும் உருவாக்கிக் கொள்வோம். நாளைய தினம் எது எப்படி மாறும், எது எப்படி நிகழும், நாம் எந்த நிலையில் இருப்போம் என்பதற்கு எந்த நிச்சயமுமில்லை. எனவே, நல்ல விஷயங்களைச் செய்ய நாளை வரை காத்திராமல், இன்றே செய்திட முன்வருவோம்.
ஜெபம்:
அன்பின் பரலோகப் பிதாவே,
நீர் எனக்குக் கொடுத்த நல்ல காரியங்களை நாளைக்கு என்று தள்ளிப்போடாமல், இன்றே செயல்படுத்தும் ஞானத்தையும் துணிவையும் தாரும். உமது சித்தத்தின்படி வாழவும், நற்செயல்களிலும், நற்பழக்கங்களிலும், உமக்குக் கீழ்ப்படிவதிலும் தாமதிக்காத இருதயத்தை எனக்குத் தாரும். ஒவ்வொரு நாளையும் உமக்காகப் பயனுள்ளதாய் பயன்படுத்த கிருபை செய்யும். என் வாழ்க்கை உமக்கு மகிமையாய் அமையும்படி என்னை வழிநடத்தும்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம், ஆமென்.